நெல்லை : தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று பரவலை தடுக்கும் விதமாக தமிழக அரசால் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்நாளில் பொது போக்குவரத்தான ரயிலில் பயணம் செய்யும் பொதுமக்கள் தங்கள் இருப்பிடம் செல்ல ஆட்டோ, வாடகை டாக்ஸி, கால் டாக்ஸி போன்றவற்றை பயன்படுத்திக் கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் நெல்லை மாவட்ட எஸ்.பி.சரவணன் உத்தரவுப்படி மாவட்டம் முழுவதும் போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் யாரும் கட்டாய தேவையின்றி வெளியே வரவேண்டாம் என்றும் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து தானும், தன்னைச் சார்ந்தவர்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் எஸ்பி. தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகளுக்கு ஆட்டோ, டாக்ஸி வசதிகளை செய்து கொடுக்குமாறு மாவட்ட போலீசாருக்கு அறிவுறுத்தினார். அதன்படி நெல்லை மாவட்டத்தில் வள்ளியூர், நாங்குநேரி, தாழையூத்து, கங்கைகொண்டான் ஆகிய ரயில் நிலையங்களில் ஆட்டோக்கள் வந்து செல்வதற்கு அந்தந்த பகுதி போலீசார் வசதிகள் செய்து கொடுத்தனர்.
மேலும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பான முறையில் ரயில் பயணிகளை ஆட்டோவில் அழைத்துச்செல்ல வேண்டும் என்று ஆட்டோ ஓட்டுநர்களுக்கு போலீசார் அறிவுறுத்தினர்.